கீழே உட்கார்ந்து கொண்டு இடது காலை நேராக நீட்டவும். கால் இடையிலோ, மூட்டுப் பக்கமமோ மடியலாகாது. குதிகால் தரையில் நன்கு பதிய, கால் விரல்கள் மேலே நோக்கி இருக்க (வான் நோக்கி) சாய்வே இல்லாமல் உங்கள் உடல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

வலது காலை உட்புறமாக மடித்திட வேண்டும். வலது காலின் குதிகால், லிங்கத்தின் (ஆண்குறி) பக்கமாக வரும்படி செய்திட வேண்டும். அல்லது அதன் பக்கமாக வந்து இடது தொடையைத் தொடும் விதத்திலும் இருக்கலாம்.

சுருக்கமாக சொன்னால், மடித்த வலது காலும் நீட்டிய இடது காலும் பார்க்கும் போது ஆங்கில எழுத்தான L வடிவில் இருக்க வேண்டும். இப்படி வலது காலை மடித்து அழுத்தியவாறே, இரண்டு கைகளாலும் நீட்டி இருக்கும் இடது காலின் நடுப்பாதத்தை கெட்டியாகப் பிடித்து தலையைச் சற்று மேலே தூக்கியிருக்கும்படிச் செய்க.

பின்பு தலையைக் குனிந்து, முகத்தை நீட்டியுள்ள முழங் காலின் (மூட்டின்) மீது வைத்திடுக. இச்சமயத்தில் மூச்சை இழுக்க வேண்டாம். வெளியே விடும் நிலை இது.

பிறகு மூச்சை உள்ளே இழுத்தவாறே மெதுவாக தலையைத் தூக்கி நிமிர வேண்டும் ( மேலே முகத்தை தூக்கும் போதும், இரு கைகளும் நடுப்பாதத்தை பிடித்து இருக்க வேண்டும்) பின்பு குனிந்து மூச்சை விட வேண்டும். இதேப் போல வலது காலை நேராக நீட்டி, இடது காலை லிங்கம் பக்கமாகத் தொட்டு, மடித்து, முன்போல் செய்ய வேண்டும்.

குனியும் பேது மூச்சை வெளியே விட்டவாறே மெதுவாகத் குனிந்திடுக. முகம் நிமிரும்போது மூச்சை உள்ளே இழுத்தவாறே நிமிர்க.

சிலர் குனியும்போது நீட்டிய காலை சற்று மேலே தூக்கு வார்கள். இது தவறு. முதலில் சிரமமாக இருந்தாலும் பிறகு போகப் போக, தலைதான் மூட்டை நோக்கி குனிய வேண்டுமே தவிர நீட்டிய கால் விறைப்பாகத் தான் (தரையை தொட்டவாறு இருக்க வேண்டும்) அதுவே ஆசன நிலை. பாதங்களும் மேலே நிமிர்ந்த வாறு இருக்க வேண்டும்.

பலன்கள்

தினசரி மூன்று நிமிடம் இரு கால்களையும் மாற்றி மாற்றி செய்தால் அற்புதமான பலன் கிடைக்கும்.

காய்ச்சலே வராது. சளிநோய் வந்தாலும் விரைவில் குணமாகும் ஆசனம் இது. காய்ச்சல் காரணமாகத் தோன்றும் சுரப்பி வீக்கங்கள் சட்டென்று குணமாகி விடும்.

வயிற்று உப்புசம், இருமல் குணமாகும். சயத்ரோகத்தின் முதல் நிலை அறிகுறிகளையும், இவ்வாசனம் மூலம் நீக்கி விடலாம்.

விந்து கெட்டிப்படும். விலாப்புறம் பலப்படும்.

வாயு தொந்தரவு நீங்கும். உடல் நல்ல நெகிழ்ச்சி நிலை அடையும்.

வயிற்றுப் பகுதியின் ரத்த ஓட்டம் அதிகப் படும். சிறுகுடலும், பெருங்குடலும் (தசை நாண்கள்) இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். அதனால் எந்தவித மலச்சிக்கலும் தீரும். கணையம், மண்ணீரல், கல்லீரல் முதலியன நன்கு வேலை செய்யும்.

அடிவயிறு இழுப்பதால் தொந்தி நன்கு கரைந்து விடும். முதுகு, இடுப்புப் பகுதியில் வலிகள் இருந்தால் மறைந்து விடும்.

சரிர பலவீனத்தையும், கண் எரிச்சலையும், சிறு நீரகத்தில் ஏற்படும் நோய்களையும் தீர்த்து விடும் சக்தி கொண்டது.